ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் போதைப் பொருள் கடத்திச் சென்ற சம்பவம்
ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கல்முனையில் இருந்து காத்தான்குடி பிரதேசத்துக்கு முச்சக்கரவண்டி ஒன்றிலும் கார் ஒன்றிலும் ஜஸ் போதைப் பொருள் கடத்திச் சென்ற சம்பவங்களில் கணவன் மனைவி உட்பட 4 பேரை 8 அரை கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் நேற்று புதன்கிழமை (11) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கடைய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமிந்த நயனசிறியின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஆரையம்பதி வைச்சந்தி 5ம் கட்டை பொலிஸ் வீதிச்சோதனைச் சாவடியில் சம்பவதினமான நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில் கல்முனையில் இருந்து காத்தான்குடியை நோக்கி சென்ற நீலநிற முச்சக்கர வண்டியை நிறுத்தி அதில் பிரயாணித்த 3 பேரை சோதனையிட்டனர். இதன் போது சாய்ந்தமருதைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரிடமிருந்து இருந்து 1 கிராம் ஜஸ் போதைப் பொருளையும் அவரது 17 வயதுடைய மனைவியிடம் இருந்து 5 கிராம் ஜஸ், அவர்களின் நண்பரிடமிருந்து ஒன்றரை கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டதையடுத்து 3 பேரை கைது செய்தனர்.
அதேவேளை பொலிசாருக்கு கிடைத்த இன்னொரு தகவலுக்கமைய கல்முனையில் இருந்து காத்தான்குடிக்கு கார் ஒன்றில் ஜஸ் பேதை பொருளை கடத்திச் சென்ற காரை காத்தான்குடி டிப்போ சந்தியில் மடக்கி பிடித்து சோதனையிட்ட போது அதில் பிரயாணித்த ஒருவரிடமிருந்து ஒன்றரைக்கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்
இந்த இரு வேறு சம்பவங்களில் 4 பேரை கைது செய்ததுடன் 8 அரை கிராம் ஜஸ் போதைப் பொருள், கார் ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (12) ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
No comments: