உக்ரைன் போரில் பாதிப்படைந்த மக்களின் எண்ணிக்கையை வெளியிட்ட ஐ.நா சபை
உக்ரைனில் மார்ச் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறைந்தது 847 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,399 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடிக்கிறது.
மரியுபோல், அவ்திவ்கா, கிராமடோர்ஸ்க், போக்ரோவ்ஸ்க், நோவோசெலிடிவ்கா,
வெர்க்னோடோரட்ஸ்கே, கிரிம்கா மற்றும் ஸ்டெப்னே ஆகிய பகுதிகளில் ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் அமைப்பு மேலும் தெரிவிக்கையில்,
உக்ரைன் நாட்டில் பெரிய கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பல நகரங்களில் நிகழ்ந்த உயிரிழப்புகளை சரிபார்க்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பீரங்கிகள், ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.
இதனிடையே ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்குண்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவி செய்வதற்காக தொண்டு நிறுவனங்கள், அங்கு செல்வதற்குப் போராடி வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments: